காரைக்கால், நவ. 25 : திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்ற, சுமார் 550 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதால் 27ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காரைக்காலில் நடக்கவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்புவிடுத்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிராங்களின் லால்தின்குமா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கூறிப்பில் கூறியிருப்பது :
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை இணைந்து இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேர்முகத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று இந்த தேர்வை நடத்துகிறது. 500 பெண்கள் மற்றும் 50 இளைஞர்கள் அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு தேவைப்படுகிறார்கள். நூற்பாலை இயந்திரம் இயக்கும் பணி, உதவியாளர், தையல் கலைஞர், பரிசோதகர், இஸ்திரி போடுபவர், பேக்கிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் எடுக்கப்படுகிறது.
18 வயது முதல் 35 வயது வரையிலும், 5 ஆம் வகுப்புக்கு மேல் படித்தவராகவும் இருக்கவேண்டும். 8 மணி நேர வேலை, மாதம் ரூ.7,196 சம்பளமும், கூடுதல் நேர பணிக்கு கூடுதல் ஊதியமும் தரப்படுமென அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
தங்குமிடம் இலவசம், சலுகை விலையில் உணவு, பணிக்கு வந்து செல்ல இலவச போக்குவரத்து வசதி, தொழிலாளர் காப்பீடு, தொழிலாளர் வைப்புத்தொகை, உற்பத்திக்கேற்ற ஊக்கத் தொகை, இலவச மருத்துவ வசதி உள்ளிட்டவை நிறுவனத்தால் செய்து தரப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தோர் காலை 9 மணி முதல் 2 மணி வரை முகாமில் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உணவு பங்கீட்டு அட்டை ஆகிய நகல்களுடன் நேரில் வரவேண்டுமென அதில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.