திருப்பூர், அக்.4: திருப்பூரில், கடந்த மாதம் 24ம் தேதி திருப்பூர்-காங்கயம் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை மீட்ட போலீஸார், கொள்ளையர்கள் 6 பேரைக் கைது செய்துள்ளனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
திருப்பூர் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 1381 பவுன் நகையில் 1106 பவுன் நகை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளை போன ரூ.2,36,000 ரொக்கப் பணத்தில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.45,000 மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இன்று முற்பகல் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஐஜி வன்னியப் பெருமாள் கூறும்போது, கொள்ளையர்களிடம் இருந்து நகை முழுவதுமாகக் கைப்பற்றி விட்டோம் என்றும், ரொக்கம் மட்டும் ஒரு பகுதிதான் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.
கொள்ளையர்கள் பயன்படுத்தி கிணற்றில் வீசியெறிந்து சென்ற செல்போன் மூலம் அவர்களைக் கண்டுபிடித்ததாகவும், மேலும் இதுகுறித்த விளக்கத் தேவையில்லை, மிகவும் நுட்பமான முறையில் கொள்ளையர்களைப் பிடித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அம்மூவரையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.