மதுரை, செப்.10: நிலமோசடி வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த மின்னல்கொடி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உச்சம்பட்டியை சேர்ந்த முருகன்(வயது 40) என்பவர் அளித்த புகாரில் மின்னல்கொடி கைதுசெய்யப்பட்டார். முருகனுக்கு ஒத்தக்கடை அருகே புதுத்தாமரை பட்டியில் 1 ஏக்கர் நிலம் உள்ளது.
இதை தனக்கு முருகன் எழுதித் தந்ததாக போலி பத்திரம் தயாரித்ததாக செல்லூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், பிற்பட்டோர் நலவாரிய பொறுப்பாளருமான மின்னல்கொடி மீது புகார் செய்யப்பட்டது.
இந்த நிலத்தை தல்லா குளத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு மின்னல் கொடி ரூ.40 லட்சத்துக்கு விற்றதாக தெரியவந்தது. இதுபற்றி முருகன் மாவட்ட நிலப்பறிப்பு மீட்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னல்கொடி, போலி பத்திரம் தயாரிக்க உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பொட்டுக்காரன், பத்திர எழுத்தாளர் விஜயகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
நிலஅபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி மீது கந்து வட்டி புகாரும் கூறப்பட்டது. ஆள்கடத்தல், கந்துவட்டி பறிப்பு என பல்வேறு புகார்கள் இவர் மீது பதியப்பட்டதால், போலீஸார் இவரை குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளதாக இன்று அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.