சென்னை, ஏப். 16: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர்-நான்குனேரி) கேள்வி எழுப்பினார். அவர், "தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. நான்குனேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 15 கிராமங்களில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும், கோழிப்பண்ணைகளும் உள்ளன. எனவே, நான்குனேரியில் உள்ள கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஓர் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமானால் அந்தப் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு நாள்தோறும் 60 கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வரும் நிலை இருக்க வேண்டும். நான்குனேரியில் உள்ள கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக மாற்றுவதற்கு தேவையான அரசின் விதிமுறைகள் அனைத்தும் பொருந்துவதால் அரசின் செயற்குறிப்பில் எடுத்துக் கொள்ளப்படும்போது முன்னுரிமை அடிப்படையில் அந்தப் பணியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.