நாமக்கல், ஆக.28: நாமக்கல்லில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு அதிர்ச்சி. பள்ளி மைதானத்தின் கதவு பூட்டுப் போட்டு அடைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு அரசுப் பள்ளி நிர்வாகம் தடைவிதித்துள்ள இந்தச் செயல் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் மீண்டும் மைதானத்தைத் திறந்து தாங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தர வலியுறுத்தி நாமக்கல் - மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் காலை 6.30 முதல் 8 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கேட்டபோது, நடைப்பயிற்சிக்கு வரும் மக்கள் மைதானத்தில் சிறுநீர், மலம் கழித்து நாசப்படுத்தி விடுகின்றனர் என்றும், பள்ளிமைதானத்தில் விளையாடும் மாணவர்களுக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறினர்.மேலும், இந்தப் பள்ளி வளாகத்தில் மைதானத்தை ஒட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகமும் உள்ளது. இந்தச் சீர்கேடு குறித்து ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு சென்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கல்வி அலுவலர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.