சுமை தூக்கும் கூலித்தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் பெரியப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் நல்லையன்(60) மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மகன் சேகர்(40). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சேலம் சாலையில் முட்டை குடோனில் வேலை செய்துவந்த சேகருக்கு, அதே குடோனில் வேலைசெய்து வந்த நாமக்கல் பிடில் முத்துத்தெரு ஷாஜகானின் 22 வயது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால், ஆவேசமடைந்த ஷாஜகான்(52), கடந்த 2011 பிப்ரவரி 21-ம் தேதி மாலை நாமக்கல் பிரதான சாலையிலுள்ள குடோனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நல்லையனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஷாஜகான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து நல்லையன் மீது ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த நல்லயனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அன்று இரவே நல்லையன் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து ஷாஜகான் மீது 302 (கொலை), எஸ்சி, எஸ்டி 3(2)(IV) சட்டப்பிரிவுகளின் கீழ் நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.வேலு, குற்றம்சாட்டப்பட்ட ஷாஜகானுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறினார். தண்டனை விதிக்கப்பட்ட ஷாஜகான் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.