ஈமு கோழிப்பண்ணை வைத்து தருவதாக கூறி ரூ.2.50 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

விருதுநகர் அருகே ஈமு கோழிப்பண்ணை நடத்துவதாக 129-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்டோர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார்
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஈமு கோழிப்பண்ணை நடத்துவதாக 129-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்டோர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளி்த்தனர்.

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை அடுத்த முத்துச்சாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.சரவணன்(38). இவர் சேலத்தில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்தக் கிராமம் அருகே கன்னிசேரி, சிவகாசி, முதலிபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஈமு கோழிப் பண்ணை வைத்து தருவதாக அணுகியுள்ளார். அதற்கு மாத வருமானம் தருவதாகக் கூறியும், முதல் பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் வழங்கி விடுவதாகவும் கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் முதலீடு செய்துள்ளனர். இதேபோல், இப்பகுதியில் 129 பேரிடம் ரூ.2.50 கோடி வரையில் வசூல் செய்துள்ளார். அதோடு, ஒவ்வொருவரும் 10 முதல் 20 ஈமு கோழிகளை வளர்க்கும் படி வழங்கியுள்ளார். மேலும், இக்கோழிகளை பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையில் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாகவும் கூறி குறிப்பிட்ட மாதங்களுக்கு வழங்கினாராம். அதேபோல், சிலருக்கு வழங்கிய காசோலைகளை வங்கிகளில் வசூலுக்கு கொடுத்தால் பணம் இல்லையென்று திரும்பி வந்துள்ளது.

அதையடுத்து, கடந்த ஒரு வாரம் முத்துச்சாமியாபுரம், கன்னிசேரி ஆகிய பகுதிகளில் வளர்ப்பதற்கு கொடுத்திருந்த ஈமு கோழிகளை வாங்கிய பணத்தை  எதுவும் திருப்பித் தராமல் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக கேட்டதற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை திருப்பி தந்து விட்டதாக கூறி பணம் தர மறுத்தாராம். இது தொடர்பாக முத்துசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாதி்க்கப்பட்டவர்களின் சார்பாக ரவிபாண்டியன் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் ஈமு கோழி பண்ணை நடத்தி வரும் உரிமையாளர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com