விருதுநகர் அருகே வாகன விபத்துக்களில் 2 மான்கள் சாவு

விருதுநகர் அருகே தண்ணீர் மற்றும் இரை தேடி வந்த 2 மான்கள் 4 வழிச்சாலையை கடக்கும் போது அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்துக்களில் இன்று உயிரிழந்தன. எனவே விபத்தினால் மான்கள்
Updated on
1 min read

விருதுநகர் அருகே தண்ணீர் மற்றும் இரை தேடி வந்த 2 மான்கள் 4 வழிச்சாலையை கடக்கும் போது அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்துக்களில் இன்று உயிரிழந்தன. எனவே விபத்தினால் மான்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் சாலை தடுப்புகள் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் விரும்புகின்றனர்.

விருதுநகர் அருகே மருளூத்து கண்மாய் பகுதியில் புல்வெளி நிறைந்து காணப்படும் பகுதியாகவும், மரக்கன்றுகளும் அடர்த்தியாக இருப்பதாலும் மான்கள் அதிகம் வசித்து வருகிறது. இந்நிலையில் இக்கண்மாயில் போதுமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில் தண்ணீர் தேடி 4 வழிச்சாலையை கடந்து மேற்கு பகுதி விவசாய தோட்டங்களுக்கு செல்கையில் விரைந்து வரும் வாகனங்களின் விபத்துக்களில் அடிபட்டு படுகாயம் அடைந்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

அதேபோல், இன்று காலையில் இரை தேடி சாலையை கடக்கும் போது மருளூத்து கிராமம் விலக்கு அருகே ஒரு ஆண் மானும், அதையடுத்து சிறிது தூரத்தில் உள்ள பட்டம்புதூர் விலக்கருகே ஒரு பெண் மானும் அடுத்தடுத்து வாகன விபத்துக்களில் அடிபட்டு கிடந்துள்ளது. இது குறித்து காலை நேரங்களில் நூற்பாலை மற்றும் விவசாய தோட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அடுத்தடுத்து இரண்டு மான்கள் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே இப்பகுதியில் மான்கள் அதிமாக இருப்பதை அறிந்து பல்வேறு வகைகளில் மான்களுக்கு விவசாயிகள் உதவி புரிந்து வருகின்றனர். அதோடு, இந்த மான்கள் அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்கு நீர் பருகுவதற்காக தேடி வருகிறது. இதற்காக கிணற்றருகே தொட்டிக்கு சென்றால் விழுந்து விடும் என்பதால் அருகில் வாய்க்கால் ஓரத்தில் ஒவ்வொரு பம்ப்செட் தோட்டங்களிலும் துணைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல், இதற்கு முன்பு வாகன விபத்துக்களில் 3 பெண் மான்கள் வரையில் உயிரிழந்ததுள்ளது.

எனவே இக்குறிப்பிட்ட பகுதிகளில் மான்கள் விபத்தில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முதல் கட்டமாக விரைந்து வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் வனத்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினருடன் கலந்தாய்வு செய்து சாலை தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை உள்ளிட்டவைகளை வைத்தால் மான்களை விபத்திலிருந்து பாதுகாக்கலாம் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com