விருதுநகர் அருகே கிறிஸ்துவ திருச்சபையின் பணம் ரூ.73.78 லட்சத்தை மோசடி செய்த போதகர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் மீது முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
விருதுநகர் கச்சேரி சாலையில் தூயயோவான் திருச்சபை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்னாள் திருச்சபை நிர்வாக குழு உறுப்பினரான அல்லம்பட்டியைச் சேர்ந்த ஞான்சிதம்பரம்(68). தற்போது, இந்த ஆலயத்தின் போதகராக பால்ராஜ் சாமிதாஸ் உள்ளார். அதேபோல், பொருளாளராக இன்பசாலமன், செயலாளராக ஞானவெஸ்லியும், உறுப்பினர்களாக ஏஞ்சலின் மற்றும் நான்ஜி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் திருச்சபைக்கு வரும் காணிக்கை பணம் மற்றும் பொருள்கள் விற்பனை பணம் ரூ.73.78 லட்சம் பணத்தை திருச்சபையின் வங்கிக் கணக்கில் போடாமல், தங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி இருப்பு வைத்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த ஞான்பிள்ளை சிதம்பரம் திருச்சபை கணக்குகளை கேட்டாராம். அதற்கு, உன்னிடம் கூற வேண்டிய அவசியம் இல்லையென்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். எனவே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஞான்பிள்ளை சிதம்பரம் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சபை பணத்தை மோசடி செய்த மேற்குறிப்பிட்டுள்ள போதகர், பொருளாளர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.