நாட்டின் அடுத்த பிரதமரை அதிமுகவே நிர்ணயிக்கும். அந்நிலையை ஏற்படுத்திட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர் தேர்தல் பணியாற்றிடவேண்டும் என மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலருமான வைகச்செல்வன் கூறினார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று தமுக்கத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் வைகச்செல்வன் பேசியதாவது:
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையானது அதிமுகவின் இதயம்போன்றதாகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியில் இளைஞர் பாசறை முக்கியப் பங்காற்றியது.பதவி, பொறுப்புகளுக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணியாற்றவேண்டும். மதுரையில் பாசறைக்கு 25 ஆயிரம் புதிய உறுப்பினரைச் சேர்க்கவேண்டும். காலியிடம் மற்றும் செயல்படாதவர்களது இடங்களில் புதியவர்களை நியமிக்கவேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையை எஸ்.எம்.எஸ்., துண்டுப் பிரசுரம், தெருமுனைப் பிரசாரம், திண்ணைப் பிரசாரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரப்பவேண்டும்.
தமிழகத்திலிருந்து பிரதமராகும் வாய்ப்பை காமராஜர் நிராகரித்தார். மூப்பனாருக்கு கிடைப்பதை கருணாநிதி தடுத்துவிட்டார். இப்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்புள்ளது. ஆகவே நாம் கடுமையாக தேர்தல் பணியாற்றவேண்டும்.வரும் மக்களவைத் தேர்தல் முடிந்ததும், நாட்டின் பிரதமரை தமிழகம் தீர்மானிக்கம், தமிழகத்தின் முடிவை அதிமுக நிர்ணயிக்கும். அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்கும் முடிவை எடுப்பர். நாட்டின் பிரதமராகும் அனைத்துத் தகுதியும் உள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் உறவுகளைக் கூட தள்ளிவைத்துவிட்டு அதிமுகவையே அவர் தமது குடும்பமாக நினைக்கிறார். ஆனால், குடும்பத்துக்காக நாட்டு நலனை பலிகடாவாக்குபவர் கருணாநிதி. சொந்த பந்தங்களுக்காக கட்சி, ஆட்சியை நடத்தும் நோக்கமுடையவர் கருணாநிதி என்றார் அமைச்சர் வைகைச்செல்வன்.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சரும், அதிமுக மதுரை மாநகர் செயலருமான செல்லூர் கே.ராஜு ஆற்றிய ஆலோசனை உரை: அதிமுகவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக பாசறையைச் சேர்ந்தவர்கள் செயல்படவேண்டும். செங்கலாக கட்சியில் சேரும் தொண்டர்களைக் கோபுரமாக மாற்றுபவர் ஜெயலலிதா.தமிழகத்தின் அடுத்த தலைமுறை நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார். மக்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மதுரையில் போட்டியிடவேண்டும் என்பதே கட்சியினரின் ஆசை என்றார்.
கூட்டத்தில் மதுரை மேயர் வி.ராஜன்செல்லப்பா, புதுதில்லியின் தமிழக சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், முத்துராமலிங்கம், கே.தமிழரசன், கருப்பையா, தமிழரசன், தேமுதிக சுந்தரராஜன் மற்றும் துணைமேயர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக அதிமுக பேச்சாளர் ஜி.பாண்டியன் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. பாசறை மதுரை மாநகர் மாவட்டச் செயலர் டி.வினோத்குமார் வரவேற்றார். முத்துசாமி உறுதிமொழி வாசித்தார். மனோகரன் தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றச்செய்தார். பாசறை நிர்வாகிகள் சோலையழகுபுரம் வீர.சுதாகர், சி.ராஜூ உள்ளிட்டோர் நன்றி கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.