பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது; 18 பவுன் நகை பறிமுதல்

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபரை தனிப்படை போலீஸார் கைதுசெய்து அவரிடம் இருந்த 18 பவுன் நகைகள், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபரை தனிப்படை போலீஸார் கைதுசெய்து அவரிடம் இருந்த 18 பவுன் நகைகள், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மோகனூர், பள்ளிப்பாளையம், பரமத்தி, எருமப்பட்டி பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோகனூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையி்ல், சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புப் பணியின் ஒருபகுதியாக தனிப்படை போலீஸார் என்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை அருகே சுந்தநாயகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் செல்வம்(34) என்பதும், மேற்படி மோகனூர், பள்ளிப்பாளையம், பரமத்தி, எருமப்பட்டி பகுதி வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக செல்வத்தை கைது செய்த போலீஸார் அவர் அளித்த தகவலின்பேரில் மோகனூர் காவல்நிலைய எல்லைக்குள் திருடிய 15.5 பவுன் தங்கநகை, வெள்ளி பொருட்கள், பள்ளிபாளையம் மற்றும் பரமத்தி காவல்நிலைய சரகத்தில் திருடிய 2.5 பவுன் தங்க நகைகள், எருமபட்டி காவல் நிலைய சரக எல்லைக்குள் திருடிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து களவுபோன பொருட்களை மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் பாராட்டினார்.

eon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com