விருதுநகரில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஆட்சியர் ஏற்றி வைத்து, பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சூலக்கரை காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி ஆகியோர் முன்னிலையில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் மைதானத்தில் தேசிய கொடியேற்றினார். பின்னர் காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊர்வகாவல் படை, தேசிய மாணவர் படைகளின் அணிவகுப்பை வாகனத்தில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் கதராடை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 52 பேருக்கு தலா ரூ.2569 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.31 ஆயிரம் மதிப்பிலான மாற்று செயற்கை கால்கள், 10 பேருக்கு தலா ரூ.5500 வீதம் காதொலி கருவிகளையும், சமூக நலத்துறை சார்பில் இருபெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 10 பேருக்கு ரூ.1.52 லட்சமும், மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.29 லட்சமும் உதவித் தொகையும், பொது சுகாதாரத்துறை சார்பில் ஜனனி சுரஷா யோஜனா திட்டத்தில் தலா ரூ.700 வீதம் உதவித் தொகையும், ஈமச்சடங்கு நிதி உதவி தலா 12,500 வீதம் 4 பேருக்கும், நலிந்தோர் உதவித் தொகை தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கும், விதவை உதவித் தொகைகான உத்தரவு 5 பேருக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்ரில் திருமண நிதியுதவி தலா ரூ.10 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 10 பேருக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், 9 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரமும், வீட்டுமனைப்பட்டா 5 பேருக்கும், வேளாண்மை துறை சார்பில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான் ஒருவருக்கும், விதை மானியம் ரூ.4 ஆயிரம் ஒருவருக்கும், மருத்துவத்துறை சார்பில் விலையில்லா கண்கண்ணாடி மாணவ, மாணவிகள் 5 பேருக்கும் என மொத்தம் 141 பேருக்கு ரூ.8.16 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
அதையடுத்து, அரசு துறையில் 25 சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான பணமுடிப்புகளையும் வழங்கினார். இதையடுத்து மாணவ, மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.அண்ணாமலை நாடார் மேல்நிலைப்பள்ளி, எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி, நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேவிஎஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் மா.பிரபாகர், மகளிர் திட்டம் பிச்சை, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன், சிவகாசி கோட்டாட்சியர் ரெங்கன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருமைநாயகம் வரகுணராஜ், மருத்துவத்துறை இணை இயக்குநர் கதிரேசன், வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.