

விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 11119 பேர் வரையில் கலந்து கொண்டனர். இத்தேர்வு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 28 தேர்வு மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. இம்மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11363 பேர் வரையில் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், 11119 பேர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினார்கள். அதோடு, 244 பேர் வரையில் இத்தேர்வில் பங்கேற்கவில்லை.
மேலும், இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன், ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது உடன் தொழில் கல்வித்துறை இணை இயக்குநர் தர்மராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.