விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராம்குமார் ஊராட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்டரங்கில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுப்பதற்கான விளக்க கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூக்கையா முன்னிலை வகித்தார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சிவராம்குமார் பங்கேற்று பேசியதாவது: கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊராட்சி பகுதிகளில் குழந்தைகள் விழுந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க வேண்டும்.
மேலும், ஆழ்துளை குழாய் கிணறு தோண்டும் போதே அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் செல்லாதவாறு எச்சரிக்கை பலகை வைப்பது அவசியம் ஆகும். அதையடுத்து, கிணறு தோண்டியவுடன் உடனடியாக பைப் உள்ளிட்டவைகளை பொருத்தும் பணியை முடிக்க வேண்டும். பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை சுற்றி மெட்டல் சீட்டினால் மூடி வைக்க வேண்டும். சாலையோரத்தில் திறந்த வெளிக் கிணறுகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை விழுந்து விடாமல் தடுக்கும் வகையில் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பி பாதுகாக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 58 கிராம ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.