விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய பகுதிகளில் ஆற்றுப்படுகைகளில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருச்சுழி அம்பேத்கார் திடல் முன்பு திமுகவின் சார்பில் மணல் கொள்ளையை தடுக்கவும், அரசு மணல் குவாரிகளை அகற்றவும் வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி வரையிலான குண்டாறு பகுதிகளில் 11 இடங்களில் இரவு நேரங்களில் திருட்டுத் தனமாக சமூக விரோதிகள் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். மேலும், அரசு சார்பிலும் இப்பகுதிகளில் மணல் குவாரிகள் அமைத்துள்ளனர். 3 அடி வரையில் வரையில் தவிடு மணல் எடுப்பதாக கூறி 30 அடி ஆழம் வரையில் எடுத்து வருகின்றனர்.
இந்த ஆற்றுப்படுகைகளை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோல் தொடர்ந்து மணலை அள்ளி வருவதால் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் வாழ்வதாரம் பாதிக்காமல் இருக்கும் வகையில் அரசு மணல் குவாரிகளை அகற்றவும், மணல் கொள்ளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதையடுத்து, தொடர்ந்து மணல் கொள்ளையை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காரியாபட்டி ஒன்றிய செயலாளர் சண்முகசாமி, திருச்சுழி ஒன்றியச் செயலாளர் பொன்னுத்தம்பி மற்றும் நரிக்குடி ஒன்றிய செயலாளர் போஸ் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.