

விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராஜேஸ் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையத்தில் பயணிகள் வசதிக்கான பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராஜேஸ் மிஸ்ரா, மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்கிழமை சிறப்பு ரயிலில் வருகை தந்தனர். ரயில்வே மஸ்தூர் யூனியன் மற்றும் விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான குடிநீர் வசதி மற்றும் அமரும் இருக்கைகள் உள்ளனவா என்றும், பயணிகள் ஓய்வறையில் தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் பார்வையிட்டார். வயதானவர்கள், பெண்கள் தங்குவதற்கான வசதி, அவசர மருத்துவச் சிகிச்சை கிடைக்கவும் செய்யவும் வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விருதுநகர் பகுதியின் முக்கிய பிரமுகர்கள் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோரிடம் எடுத்துரைத்து மனுக்களை அளித்தனர். மேலும், சிறிது நேரம் ரயில் நிலைய அலுலர்களிடம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, கோரிக்கை மனுக்களுடன் கூட்டம் அதிகமாக வரவே உடனே சிறப்பு ஆய்வு ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதனால், முக்கிய பிரமுகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
மாயமான பூந்தொட்டிகள்: விருதுநகர் ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்கு வருவதற்கு முன்பாக ரயில் நிலையம் முழுவதும் பூந்தொட்டிகள், ரயில் நிலைய அலுவலர் அலுவலகம் உள்ளிட்டவைகள் சுத்தமாக வைத்திருந்தனர். அதோடு, வெளியிலும் முன்புறம் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களையும் ரயில்வே போலீஸார் மூலம் அகற்றினர். ஆனால், அதிகாரிகள் வந்து சென்ற சிறிது நேரத்தில் பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.அதேபோல், ரயில் நிலையம் முன்புறம் ஆட்டோக்கள் முற்றுகையிடுவது போல் நிறுத்தியும் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.