ஊதிய முரண்பாடுகள் மற்றும் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில செயலாளர் தொடங்கி வைத்து துவக்கவுரையாற்றி பேசினார். மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக பேசினார்.
இதில், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.சாலைப்பணியாளர்கள் பணிநீக்க காலமான 41 மாதத்தை வரன்முறை செய்து ஊதியம் வழங்கவும், அக்கால கட்டத்தில் மரணமடைந்த சாலைப்பணியாளர்களின் குடுபத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் பணிப்பளுவை குறைக்கும் வகையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.3500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சங்கர்கணேஷ் மற்றும் சங்கத்தின் நி்ர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.