விருதுநகர்-பாவாலி சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முதல் பர்மா காலனி வரையிலான பாவாலி சாலையில் பாதாளச் சாக்கடை குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால், இச்சாலையில் சாலைப்பணிகளுக்காக கொட்டி வைக்கப்பட்ட ஜல்லிக் கற்கள் மற்றும் கல் தூசிகள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பணிகள் முடிவடையாமல் இருக்கும் போதே போக்குவரத்தும் விடப்பட்டன. இதனால், தூசிகள் அதிகம் இருப்பதாலும், நெடியால் சிறுவர், குழந்தைகள் யாரும் நடமாட முடியாத அளவிற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, இச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமலும் உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் முஸ்லீம்கள் கல்பள்ளி வாசலுக்கு வாகனங்களை நிறுத்தி வி்ட்டு தொழுகைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் இருக்கிறது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு தடவை இப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலே இருந்தது.
இந்நிலையில் இதைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹீம் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விருதுநகர் நகராட்சி தலைவர் மா.சாந்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சென்றாயர் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் தெரிவிக்கையில், இச்சாலையில் தூசி அதிகம் பறக்கிறது. இதனால், குழந்தைகள், பெரியோர்கள் ஆகியோர் வீட்டிற்குள் இருக்க முடியாத நிலையிருக்கிறது. அதனால், விரைவில் சாலைப்பணியை தொடங்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பகுதியில் இரண்டு நாள்களில் பணிகள் தொடங்கி தரமான சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.