ஒருபால் மணத்தை மத்திய, மாநில அரசுகள் ஆதரிக்க வலியுறுத்தி திருநங்கைகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதையொட்டி, இதயம் திருநங்கைகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் சுமார் நூறு திருநங்கைகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது சங்கத்தின் பொருளாளர் என்.மாளவிகா கூறியது: இதயம் திருநங்கைகள் முன்னேற்றச் சங்கம் திருநங்கைகள், கோத்திகள் மத்தியில் சமூக பாதுகாப்புத் திட்டங்களையும், நோய் தடுப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தற்போது ஒருபால் மணம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் 377 மிகக்குற்றம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம் பாலின சிறுபான்மை மக்களை ஒடுக்குவதாகவும், அவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தவிர, கடந்த 10 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த பாலின சிறுபான்யினரது வாழ்வதாரம், உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் அவர்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழக அரசு பாலின சிறுபான்மையினரின் வாழ்வதாரம் மேம்பட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து, பாலின சிறுபான்மையினருக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டம் உருவாக்கவும், அதற்கு மாநில அரசு வலியுறுத்தவும் வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், திருநங்கைகளின் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.