

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம பொதுமக்கள் காலிக்குடங்களுடன் விருதுநகர் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியைச் சேர்ந்தது பராசக்தி நகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் தண்ணீர் வரத்து இல்லை. இரவில் மின்னழுத்தம் குறைவாக இருப்பதால் வீடுகளுக்கும் மின்விநியோகம் இல்லாமல் இருட்டாகவே இருக்கிறது.
இதனால், சின்டெக்ஸ் தொட்டியின் மோட்டாரும் இயங்காத நிலையில் இருக்கிறது. இதனால், உப்பு நீரை எடுத்துக் கூட பயன்படுத்த முடியாத நிலையிருப்பதாக கூறி பொதுமக்கள் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, ஊராட்சி தலைவர் நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றியக் குழு தலைவரிடம் பொதுமக்களின் சார்பில் நாகஜோதி தெரிவிக்கையில், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரினால் ஊராட்சி தலைவர் உதாசீனம் செய்கிறார். அதோடு, யாரும் ஆதரவளிக்கவில்லையென கூறி வளர்ச்சி பணிகள் செய்யவிடாமல் தடுக்கிறார்.
பின்னர் அவர்களிடம் ஒரு வார காலத்திற்குள் குடிதண்ணீருக்கு ஏற்பாடு செய்யப்படும் என ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி கூறியதை அடுத்து கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.