ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்கொடுக்க வந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் வட்டம் தும்மங்குறிச்சி அருகே தேவராயபுரத்தைச் சேர்ந்த நாயகத்தின் மனைவி மாரியாயி(55). அந்த கிராமத்தில் இவருக்கு சொந்தமாக 3 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ஆக்கிரமித்து வீடு கட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. நிலத்தை திரும்ப ஒப்படைக்க மாரியாயி பலமுறை வலியுறுத்தியும் அவர் நிலத்தை தராததை அடுத்து பாதிக்கப்பட்ட மாரியாயி, 10 நாட்களுக்கு முன் எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எனினும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கப்பட்டதால் அவர் நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முறையிட்டுள்ளார்.
தொடர்ந்து எம்எல்ஏ அளித்த பரிந்துரைக் கடிதத்துடன் ஆட்சியரிடம் மனு அளிக்க திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலக முன்புற கதவுக்கு வெளியே காத்திருந்த மாரியாயி, உடல்நிலை சரியில்லாமல் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள், போலீஸார், மூதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அவரது உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.