காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாகாமல் இருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை டிச.31-ம் தேதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை வெளியிடப்படாததற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது மத்திய அரசிதழில் வெளியிட கர்நாடக அரசின் வழக்குரைஞர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், மய அரசிதழில் வெளியிடுவதில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன என்று மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
மத்திய அரசிதழில் வெளியிடக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். திமுக எம்.பி.க்களை தில்லிக்கு அனுப்பிவைத்து எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிட்டுவிடக்கூடாது என பிரதமரிடம் கூறிவிட்டனர். ஆனால், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கெடுத்து வருகிறோம். விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த ஆண்டு கருப்பு பொங்கல்தான் கொண்டாடுவோம் என விஜயகாந்த் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. அவருக்கு எப்போதும் கருப்பு தான் பிடிக்கும் என்பதால் இப்படி கூறியிருக்கலாம்.
தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும், அங்கு வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் விடப்படுவதில்லை என்று கூறுவதும் தவறான குற்றச்சாட்டு. கூடுதல் கமிஷன் கேட்பதால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை டெண்டர் எடுக்க தயக்கம் காட்டுகின்றனர் என்றார். பேட்டியின்போது துணை மேயர் கே.சி.பழனிசாமி உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.