பணம் இல்லாமல் பாதியில் நிற்கும் உள்விளையாட்டு அரங்கப் பணி

காரைக்காலில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு தேவையான நிதி முழுமையாக வழங்கப்படாததால் பல ஆண்டுகள் ஆகியும்
Updated on
1 min read

காரைக்காலில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்கு தேவையான நிதி முழுமையாக வழங்கப்படாததால் பல ஆண்டுகள் ஆகியும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் உள்ளன.
 காரைக்கால் புறவழிச் சாலையில் உள்ள அரசுத் திடலில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்தின் மொத்தம் மதிப்பீடு ரூ. 12 கோடி ஆகும். இதில் ரூ. 6.3 கோடி செலவில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. அரங்கத்தினுள் மின் இணைப்புகள் அமைத்தல், குளிரூட்டல் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மின் வசதி ஏற்படுத்த ரூ. 1.6 கோடியும், குளிரூட்டல் வசதிக்கு ரூ. 2 கோடியும் தேவை. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உடனடியாக கிடைத்தால் அரங்கம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த அக்டோபரில் காரைக்கால் வந்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியிடம் நிதி தேவை குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். ஆனால், இதுவரையில் நிதி வராததால் பணிகள் முடிவடையவில்லை.
 வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரப் பலகையிலான தரைத்தளம் அமைக்கப்படுகிறது. காரைக்காலில் இவ்வகை தரைத்தளம் அரசு கட்டடத்தில் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இந்த உள் அரங்கத்தில் இறகுப் பந்து, மேஜைப் பந்து, டென்னிஸ் போன்ற அரங்கினுள் விளையாடக் கூடிய அனைத்து விளையாட்டுகளுக்குமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500 பேர் அரங்கினுள் அமரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 மாகே, யேனாம் பகுதிகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் விளையாட்டு அரங்கம் அமைத்துள்ளதுபோல், காரைக்காலில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இன்னும் ரூ. 3.6 கோடி தேவையான நிலையில், புதுச்சேரி அரசு தேவையான நிதியை தராததால் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன.
 இதுகுறித்து காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுவாமிநாதன் கூறியது:
 ரூ. 12 கோடி செலவிலான திட்டத்தில் கட்டுமான வேலைகள் பெரும்பாலானவை முடிக்கப்பட்டு விட்டன. ரூ. 3.6 கோடியில் மின்சார வேலைகள், குளிர்சாதனம் பொருத்தும் வேலைகள் செய்யப்பட வேண்டும். இப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய கட்டுமான வேலைகள் செய்யப்பட வேண்டும். தேவையான நிதி கிடைத்தால் 3 முதல் 4 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். 6 மாதங்களுக்குள் விளையாட்டு அரங்கம் தயார் நிலைக்கு வந்துவிடும். முதல்வர் மற்றும் அரசுத் துறை தலைமை அதிகாரிகளிடம் நிதி தேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com