தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கு தொடர்பாக கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக விற்பனை மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் கணேசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அய்யாவு, ஷாஜகான், வடிவேல் உள்ளிட்ட 4 பேர்களை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் அடிப்படையில் சேலம் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றிய ஹரிபாஸ்கர், சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த இடைத்தரகர் மு.தங்கவேல் (55) ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிபாஸ்கரை காவலில் எடுத்து கடந்த 2 நாள்களாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அவரிடம் கிடைத்த தகவலை வைத்து, திருவள்ளூர் மாவட்டம் சென்ற தனிப்படையினர் கும்மிடிப்பூண்டியில் தங்கி இருந்த ராமச்சந்திரன் (65) என்பவரை இன்று கைது செய்தனர். குடும்ப வறுமை காரணமாக தனது சிறுநீரகத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்துள்ள ராமச்சந்திரன், அதன் பிறகு சிறுநீரக விற்பனை செய்யும் இடைத்தரகராக மாறியுள்ளார்.
ராமச்சந்திரன் மூலம் 10-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்கள் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் சிபிசிஐடி டி.எஸ்.பி. எஸ்.பரணிகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.