நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் மேடான பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பது தடைபட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி 28ஆவது வார்டுக்கு உட்பட்டது கருங்காட்டுப் பழனிச்சாமி தெரு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தெற்குபுறம் தாழ்வாகவும், வடக்குப்புறம் செல்லச்செல்ல மேடாகவும் இருப்பதால் அப்பகுதி குழாய்களில் தண்ணீர் வரும் போது மேடான பகுதியிலுள்ள வீடுகளுக்கு சரிவர குடிநீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, தெருவிலுள்ள பெரும்பாலான வீடுகளில் குழாய்களில் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் கடந்த சில மாதங்களாகவே வடக்குப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் முழுமையாக தடைபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடரும் இத்தகைய பாதிப்புகளை அடுத்து அக்குடும்பத்தினர் கடந்த மாதம் நகராட்சித் தலைவரை நேரில் சந்தித்து இப்பிரச்னை குறித்து புகார் தெரிவித்ததுடன், குடிநீர் குழாய்களில் பொறுத்தியுள்ள மின்மோட்டார்களை அப்புறப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் அந்த தெருவில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இதுவரை குடிநீர் குழாய்களில் உள்ள மின்மோட்டார்களை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் என்.காளியம்மாள், ஆர்.தெய்வானை, எஸ்.சந்திரா, சி.ரத்தினம்மாள், கே.மருதாயி ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை இல்லாததால் வேறுவழியின்றி மின்மோட்டார் வைத்து உறிஞ்சும் குடும்பத்தினரிடமே குடிநீரை யாசித்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபோல், உப்புத்தண்ணீ ரும் மேடான பகுதிக்கு போதிய அளவில் கிடைக்காததால் துணி துவைக்கவும் வேறுபகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றனர்.இதேபோல், அதிகப்படியான தண்ணீரை பெற்றிட பல வீடுகளின் குழாய்களில் பொறுத்தியுள்ள உபகரணத்தையும் அப்புறப்படுத்து வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.