

மதுரை சோழவந்தானில் அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்ததற்கு, அவனது மூச்சுக் குழாயில் உணவு பொருள் சென்றதே காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மதுரை சோழவந்தானில் உள்ள அங்கன்வாடிக்கு சென்ற சிறுவன் ஆகாஷ் (2) உடல்நிலை பாதிக்கப்பட்டு செவ்வாயன்று இரவு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தான்.
சிறுவனின் உயிரிழப்புக்கு சத்துணவு சாப்பிட்டதே காரணம் என்று அவனது பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சத்துணவு பணியாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அங்கன்வாடியில் சமைக்கப்பட்ட உணவும் பரிசோதிக்கப்பட்டது. நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மற்ற குழந்தைகள் நலமாக இருப்பதும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே, உயிரிழந்த ஆகாஷின் உடல் புதன்கிழமை காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதில் குழந்தைக்கு மூச்சுக் குழாயில் உணவுப் பொருள் சென்றதால் ஏற்பட்ட பாதிப்பே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.