சேலத்தில் வாகன விபத்தில் சிக்கியவரை காவல் நிலையப் பிணையில் விடுவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (25), இவர் கடந்த மாதம் 27-ம் தேதி தனது நண்பர் அருள்குமார் (28) என்பவரது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் எதிரே வந்த கார்த்திகேயன் (25) என்பவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து நேரிட்டுள்ளது.
இது தொடர்பாக இரும்பாலை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கே.மணி (52), கடந்த 29-ம் தேதி வழக்குப் பதிவு செய்தார். மோட்டார் வாகன விபத்துகளுக்கு காவல் நிலையத்திலேயே பிணையில் விட இயலும் என்பதால் வாகன உரிமையாளர் அருள்குமாரிடம் வாகனத்தை விடுவிக்கவும், மோகனை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடவும் ரூ.5 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று மணி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத அருள்குமார், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சந்திரமெüலியிடம் புகார் தெரிவித்தார். அவரது ஆலோசனையின் பேரில் திங்கள்கிழமை ரூ.5 ஆயிரம் பணத்துடன் சென்ற அருள்குமாரிடம், ரூ.3 ஆயிரத்தை மட்டும் பெற்றுக் கொண்ட மணி, மீதி தொகையை விபத்துக்குள்ளான வாகனத்தை எடுக்கும்போது பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரமெüலி, ஆய்வாளர்கள் ரங்கராஜன், நடராஜன், செல்வராஜ் உள்ளிட்டோர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மணியை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டது சேலத்தில் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.