சட்ட விரோதமாக சிறுநீரகம் விற்பனை: சேலம் மருத்துவர் கைது

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த இடைத் தரகர் அய்யாவு (51), லத்தேரியைச் சேர்ந்த பி.வடிவேல் (46), தருமபுரி
Updated on
2 min read

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனைகளில் தருமபுரி தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த இடைத் தரகர் அய்யாவு (51), லத்தேரியைச் சேர்ந்த பி.வடிவேல் (46), தருமபுரி மாவட்டம், மணியம்பாடி பாலசுப்பிரமணியம் (40), நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி சீனிவாசன் (35), குமாரபாளையம் என்.ஷாஜகான் (45), மேட்டுப்பாளையம் சிகாமணி (53) ஆகிய 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தருமபுரி தனிப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கே.பரமேஸ்வரா, குற்றப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) சி.கபிலன் ஆகியோர் புதன்கிழமை சேலம் வந்தனர். அவர்கள் சட்ட விரோத சிறுநீரக விற்பனை தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வி.எம்.கணேசன் (39) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணேசன் சேலத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். சிறுநீரக கோளாறுக்காக தன்னிடம் வரும் நோயாளிகளை மாற்று சிறுநீரகத்துக்காக இடைத் தரகர் அய்யாவுவை அணுகும்படி மருத்துவர் கணேசன் ஆலோசனை கூறியுள்ளார். மேலும் இவர் இதுவரை சுமார் 80 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவர் கணேசன் பணியாற்றிய சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனை, சேலம் அழகாபுரம், பிருந்தாவனம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தனிப்படை காவல்துறையினர் இன்று தீவிர விசாரணை நடத்தினர். இரண்டு மருத்துவமனைகளின் நிர்வாகிகளிடமும் கணேசன் குறித்து பல்வேறு தகவல்கள், அவர் சிகிச்சை அளித்த நோயாளிகளின் பட்டியல் போன்றவற்றை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பரமேஸ்வரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தருமபுரியில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இடைத் தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சேலம் மருத்துவர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் கணேசன் சேலத்தில் உள்ள 11 தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். அவர் இதுவரையிலும் 80 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.இதற்கான சிறுநீரகங்கள் அனைத்தும் இடைத் தரகர்கள் மூலம் பெறப்பட்டதா என்று விசாரணை நடைபெறுகிறது. தேவைப்பட்டால் நோயாளிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். தற்போது மருத்துவர் கணேசன் பணியாற்றிய மருத்துவமனைகளின் நிர்வாகத்தினரிடம் முதல்கட்ட விசாரணை நடைபெறுகிறது என்றார் அவர்.

இதற்கிடையே மருத்துவர் கணேசன், தங்கள் மருத்துவமனைக்கு சரிவர பணிக்கு வராததால் அவரை ஏற்கெனவே நீக்கிவிட்டதாக அழகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.இது குறித்து அந்த மருத்துவமனையின் தலைமை செயல் இயக்குநர் எம்.சிற்பி, செய்தியாளர்களிடம் கூறும்போது, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கணேசன் எங்கள் மருத்துவமனையில் கடந்த 2011 -12 ஆம் ஆண்டுகளில் பணியாற்றி வந்தார். அவர் 2 மணி நேரம் மட்டுமே பணிக்கு வருவார். மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவமனைக்கு வரமாட்டார்.இதனால் எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரை பணியில் இருந்து ஏற்கெனவே நீக்கிவிட்டோம். மேலும் எங்கள் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com