உத்தர்கண்ட் மாநிலம் கௌரிகுண்ட் பகுதியில் மீட்பு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19பேர் பலியானதாக அஞ்சப் படும் நிகழ்வில், மதுரையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்ட அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை டிவிஎஸ் நகர் மீனாட்சி சாலை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மகன் பிரவீண்(27). மஞ்சுளா, தெற்கு ரயில்வேயின் மதுரை மண்டல அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார்.
கடந்த 2007ம் ஆண்டு பிஇ முடித்த பிரவீண், 2009ம் ஆண்டு விமானப் படையில் சேர்ந்தார். கொல்கத்தாவில் பயிற்சியில் உள்ள பிரவீண், இரு தினங்களுக்கு முன்னர் மீட்புப் பணிக்காக டேராடூனில் இருந்து சென்றார். புறப்படும் முன்னர் தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் மீட்பு பணி முடிந்த பின்னர் பேசுவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தங்களுக்குப் பிறந்த ஒரே மகன் தேசியப் பேரிடரில் மீட்புப் பணியின் போதான விபத்தில் பலியானதால் பெரும் சோகத்தில் ஆழந்தனர் கிருஷ்ணமூர்த்தி-மஞ்சுளா தம்பதியர். செய்தியைக் கேள்விப்பட்டு, அவரது உறவினர்கள் இல்லத்துக்கு வந்து ஆறுதல் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் பலியான பிரவீண் உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.