மதுரையில் தொழிலதிபரைக் கடத்தி மிரட்டியதாக மாநகராட்சி மேயரின் கார் ஓட்டுநர் எனக்கூறப்படும் நபர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மதுரை கிளாஸ்காரத்தெரு பகுதியில் வீட்டு உயபோகப் பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் தலராம் சௌத்திரி. இவரது கடைச் சுவரை கடந்த ஏப்ரல் 2-ம தேதி மர்மநபர்கள் துளையிட்டு பல லட்சரூபாய் பெருமானமுள்ள பொருள்களை எடுத்துச்சென்றதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக மாநகர் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் தலராம்சௌத்திரி தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டது. அதில் கடைக்குள் பொருள்களை எடுத்துச்சென்றவர்களில் மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பாவின் கார் ஓட்டுநர் எனக்கூறப்படும் முருகனின் பெயரையும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் கடையைக் காலி செய்வது தொடர்பாக நடந்தது என்றும், அரசியல் பிரமுகர்கள் தலையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இதுதொடர்பாக திடீர்நகர் குற்றபிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புகார் தொடர்பாக லகாராம், முகமதுஹவுஸ், முருகன் (இவர் மதுரை மேயரின் கார் ஓட்டுநர் எனக்கூறப்படுகிறது), மணிமாறன், சுபாஷ், மகேந்திரன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும், தலராம்சௌத்திரியின் கடையை வாங்க லகாராம், முகமதுஹவுஸ் ஆகியோர் முயற்சித்த நிலையில், மேயரின் கார் ஓட்டுநர் ஆள்கள் எனக்கூறிக்கொண்டு வந்த முருகன் உள்ளிட்ட 3 பேர் தலராம்சௌத்திரியை கத்திமுனையில் ஆட்டோவில் கடத்தியுள்ளனர். கோச்சடை அருகே சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் 6 ஆட்டோக்கள், 5 இருசக்கர வாகனங்களில் வந்த 30 ரௌடிகள் தலராம்சௌத்திரியை மிரட்டி தாள்களில் கையெழுத்துப் பெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்குப் பின்னர் தற்போது தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் போலீஸார் மேயரின் ஓட்டுநர் எனக்கூறப்படும் நபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்திருப்பது இச்சம்பவத்தில் பெரும் திருப்பமாக கருதப்படுகிறது. இதையடுத்து மதுரையில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.