திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வி.ரெட்டியார்பட்டியில் மருத்துவகல்வி படிக்காமல்,போலியாக மருத்துவம் செய்து வந்த இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.ஒருவரை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள வி.ரெட்டியார்பட்டியில் போலி மருத்துவர்கள் நடமாடுவதாக மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து போலி மருத்துவர்களை கண்டறிய அவர் ஊத்துமலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆலங்குளம் டி.எஸ்.பி லயலோஇக்னேசியஸ் மற்றும் போலீசார் வி.ரெட்டியார்பட்டியில் சோதனையிட்ட போது,தெற்கு கழுநீர்குளத்தை சேர்ந்த அருணாசலம் மகன் விஜயகுமார்(30),ரெட்டியார்பட்டி சாமுவேல் மனைவி ஜெயராணி(32),சங்கரன்கோவில் தாமஸ் மகன் மரியஅந்தோணி ஆகியோர் மருத்துவ கல்வி பயிலாமல் போலியாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிந்த ஊத்துமலை போலீசார், விஜயகுமார்,மரிய அந்தோணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.ஜெயராணியை தேடி வருகின்றனர்.ஜெயராணி உக்கிரன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது