

ரப்பர் தோட்டத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காமராஜர் நினைவு இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சங்கத்தினரை போலீஸார் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினார்கள்.
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு கன்னியாகுமரி மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வந்து மரியாதை செய்தனர். அதையடுத்து, தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் அகிலந்திய செயலாளரும், கூடங்குளம் அனு உலை மக்கள் இயக்கத்தின் ஆதரவாளரான டி.கே.சத்தியசீலன் தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால், முறையாக அனுமதி பெறாததால் போலீஸார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் மனுவும் அளித்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் செய்தியாளர்களிடம் சத்தியசீலன் கூறியதாவது:
முன்னால் முதல்வர் காமராஜ் ஆட்சியில் தான் கன்னியாகுமரியில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. இதில், வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு வனத்துறையினருக்கு ஈடான சம்பளமும் வழங்கப்பட்டது. கடந்த 1984 முதல் ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு தினக் கூலி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதால் தொழிலாளர்கள் நலிவடைந்துள்ளனர். எனவே அரசு அறிவித்த சம்பள பரிந்துரை குழுவின் அறிக்கையை அமுல்படுத்த வேண்டும். அழிந்து வரும் ரப்பர் தோட்டங்களை, பாதுகாக்க வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் அகிலந்திய செயலாளர் டி.கே.சத்தியசீலன் தெரிவித்தார். இதில், ரப்பர் கழக தோட்டத் தொழிலாளர்கள் இருபாலரும் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.