வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் இருப்பு சரக்கு விவரத்துடன், அதன் மதிப்பு விவரத்தையும் குறிப்பிட வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணாவிற்கு, விருதுநகர் வர்த்தக சங்கத்தின் தலைவர் யோகன் அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது:
வணிகவரித்துறைக்கு வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் படிவம் ஐ யில் மாதாந்திர விவரம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிகழாண்டு முதல் புதிய இணைப்பு வி படிவத்தில் மாத இறுதி இருப்பு சரக்கு விவரத்துடன், அவற்றின் மொத்த மதிப்பையும் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசினால் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாத இருதியிலும் இருப்புச் சரக்கு விவரங்களை சரக்கு வாரியாக, குறிப்பிட்ட இணைப்பு படிவத்தில் கொடுப்பது என்பது வணிகர்களுக்கு சிரமத்தையும், வேலைப்பளுவையும் ஏற்படுத்தும். அதிலும், சில்லறை வணிகம் மேற்கொள்கிறவர்கள் மாத இறுதி நாளில் கணக்கெடுப்பது முடியாத காரியமாகும். சில நிறுவனங்களில் இருப்பு சரக்கு விவரங்களை எடுப்பதற்கு 3 நாள்கள் வரையில் ஆகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் இருப்பு சரக்கின் மதிப்பு விவரம் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத சட்ட விதிமுறையாகும்.
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சரக்கு மாதத்தின் பல்வேறு நாள்களில், வெவ்வேறு விலைகளில் வாங்கியதாக இருக்கும். அதில் எந்த விலைக்கு வாங்கிய சரக்கு எவ்வளவு இருப்புள்ளது என்பதை சொல்ல முடியாது. இருப்புச் சரக்கு என்பது உத்தேச மதிப்பீடு தான். அதேபோல், ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் விற்பனைத் தொகை உள்ள வணிகர்கள், தயாரிப்பாளர்கள் Form WW படிவத்தைத் தணி்க்கையாளர் மூலம் தணிக்கை செய்து கொடுத்தும் வருகின்றனர்.எனவே வணிகர்களுக்கு மிகவும் சிரமத்தை கொடுக்கும் தேவையற்ற இந்த இருப்புச் சரக்கு விவர படிவத்துக்கான சட்டத் திருத்தத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிக வரித்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் விருதுநகர் வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.