விருதுநகர் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி ஒருவர் சாவு: 17 பேர் படுகாயம்
விருதுநகர் அருகே 4 வழிச்சாலை தடுப்புச் சுவரில் திங்கள்கிழமை காலையில் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி பகுதியைச் சேர்ந்தவர் மெய்நாதன்(67). இவரது தலைமையில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேனியிலிருந்து-தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்துக்கு வேனில் சென்றனர். இந்த வேனை தேனியைச் சேர்ந்த சங்கர்(21) என்பவர் ஓட்டினாராம். இந்நிலையில் வேன் விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மருளூத்து-பட்டம்புதூருக்கும் இடையே உள்ள பாலச் தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் இதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா(50) சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மேலும், வேனில் பயணம் செய்த மெய்நாதன்(67), சங்கையா(52), கருப்பையா(52), பரமசிவம்(48), சிபிச்சக்கரவர்த்தி(25), பாலசுப்பிரமணியம்(70), நாகராஜ்(68), மாரிமுத்து(20), அஜித்குமார்(39), முருகன்(39), சங்கர்ராஜன்(54),ஆனந்தன்(25) மற்றும் டிரைவர் சங்கர் உள்ளிட்ட 16 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர். இகு குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிக்கைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தேனியைச் சேர்ந்த மெய்நாதன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறுகலான பாலம்: இக்குறிப்பிட்ட இடத்தில் உள்ள 4 வழிச்சாலை பாலம் குறுகலான பாலமாக இருக்கிறது. அதனால், இரு வாகனங்கள் விலகும் போது தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இப்பாலத்தை சாலை அமைக்கும் போது அகலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.