திமுக குற்றச்சாட்டுகளால் தேர்தல் அலுவலர்களுக்கு மனஉளைச்சல்: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புகார்

ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மீது திமுகவினர் தெரிவித்து வரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளால் தேர்தல் அலுவலர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு வருவதாக
Updated on
1 min read

ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மீது திமுகவினர் தெரிவித்து வரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளால் தேர்தல் அலுவலர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு வருவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீவகாருண்யம், செயலர் வி.அர்த்தனாரி ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் வருவாய்த்துறை, இதர துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 36 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதன்காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்ட ரூ.1,45,49,910 ரூபாயும், தங்கம், வெள்ளி உள்பட ரூ.2,89,90,000 மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிரமாக தணிக்கை செய்யப்படுகிறது.

இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி பிரமுகர்களின் வாகனங்களையும் தணிக்கை செய்கின்றனர். இந்த நிகழ்வுகள் முழுவதும் வீடியோக்களிலும் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு நவம்பம் 15-ம் தேதி ஏற்காடு வட்டம் வனத்துறை அலுவலகம் அருகே கூடுதல் பறக்கும்படை அலுவலர் மணி தலைமையில் அலுவலர்கள் அதிமுக அமைச்சர் வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியது உதாரணமாகும்.

இதன்படி, தேர்தல் பணிகளில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்ட நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தல் பணிகளில் அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக திமுகவினர் புகார் மனுக்கள் அளித்து வருகின்றனர். இத்தகைய செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகி வருவது அரசு ஊழியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

எனவே, ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடியும் வரை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு வழங்கிடவும், தேர்தல் அலுவலர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அரசியல் கட்சிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com