

திருச்சுழி அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சுழி அருகே ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜன் மகள் ஜான்மேரி(17). இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்2 வகுப்பு படித்து வருகிறார். அதேபோல், இக்கிராமத்தைச் சேர்ந்த சி்க்கந்தர் மகள் நிஷாபேகம்(11) 6-ம் வகுப்பும், பொன்னையா மகன் இஸ்ரவேல்(16) 11-ம் வகுப்பும், ஜான்சிராணி(13), ராஜூமேரி(13), அந்தோணியம்மாள்(15), பொன்மணி(14), ஆரோக்கியஜெயா(14), சுபலட்சுமி(13), மலர்கொடி(16), ஜனககாமராஜ்(11), செல்வமணி(13) மற்றும் தமிழ்மணி(14) உள்ளிட்ட 18 மாணவ, மாணவிகளும் இதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
அதேபோல், இதே கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் மனைவி நாகம்மாள்(52), சாமுவேல்(28), ஈஸ்வரவேல்(25), தாயம்மாள்(40) மற்றும் பொன்னுத்தாய்(50) என 5 பொதுமக்களும் என கல்லூரணி செல்வதற்காக பஸ் ஏற வருகின்றனர். அப்போது காலையில் வேகமாக பஸ் சென்று விட்டதால், அப்பகுதி வழியாக வந்த லோடு ஆட்டோவில் ஏறி மாணவ, மாணவிகளுடன் கத்தலாம்பட்டி விலக்கருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு செல்கின்றனர். அப்போது, குண்டும், குழியுமான சாலையில் கத்தாலம்பட்டிக்கு முன்பாக ஓரப்பகுதியில் சென்ற போது சகதியில் சிக்கி திடீரென வேன் கவிழந்தது. இதில், வேனில் பயணம் செய்த 18 மாணவ, மாணவிகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, எம்.ரெட்டியாபட்டிக்கு காவல் நிலைய போலீஸார் தகவலறிந்து விரைந்து வந்தனர். பின்னர் மாணவ, மாணவிகளையும், பொதுமக்களையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து வேன் டிரைவர் சார்லஸ் என்பவரை கைது செய்து விசாரி்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.