உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர் கூட்டம்: தீர்மான நகல் கிழிப்பு, நாற்காலிகள் வீச்சு

உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டத்தில் தலைவரை எதிர்த்து கவுன்சிலர்கள் தீர்மான நகலை கிழித்தெறிந்தனர். மேலும் நாற்காலி வீசப்பட்டதால்
Updated on
1 min read

உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டத்தில் தலைவரை எதிர்த்து கவுன்சிலர்கள் தீர்மான நகலை கிழித்தெறிந்தனர். மேலும் நாற்காலி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 23 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிமுக 13, திமுக 8, தேமுதிக 1, சுயேச்சை 1  உள்ளனர். அதிமுக சார்பில் பஞ்சம்மாள் நகராட்சித் தலைவராக உள்ளார். துணைத்தலைவராக பூமராஜா உள்ளார்.

 கடந்த சில மாதங்களாகவே அதிமுக கவுன்சிóலர்கள் சிலரே நகராட்சித் தலைவருக்கு எதிராக பேசிவருகின்றனர். நகராட்சித் தலைவர் மீது பல்வேறு குற்றசாட்டுகளையும் கூறிவருகின்றனர். இரு நாள்களுக்கு முன்பு 8-வது வார்டுக்கு ஆய்வுக்குச்சென்ற நகராட்சித் தலைவரை திமுக கவுன்சிலர் தலைமையில் அப்பகுதியினர் மறித்து குடிநீர் கோரினர்.

  இந்தநிலையில், நகராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் பஞ்சம்மாள், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிப்பது தொடர்பாகப் பேசினர். அப்போது பெண் கவுன்சிலர் ஒருவர் தமது பகுதியில் குடிநீர் இல்லை என்றும் புகார் தெரிவித்தார்.

 ஆனால், கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றுவது குறித்து நகராட்சித் தலைவர் கூறினார். உடனே தீர்மானம் நிறைவேறுவதற்குரிய கவுன்சிலர்கள் ஆதரவு இல்லை என திமுக கவுன்சிலர்களும், அதிமுகவின் சில கவுன்சிலர்களும் கூறினர். ஆனால், 10 கவுன்சிலர் ஆதரவு இருப்பதால் கூட்டத்தில் அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் திடீரென மேஜைகள் கீழே தள்ளிவிடப்பட்டன. கவுன்சிலர்கள் அமரும் நாற்காலிகளும் தூக்கிவீசப்பட்டன. தீர்மான நகலை சில கவுன்சிலர்கள் கிழித்து எரிந்ததுடன், கவுன்சிலர்கள் வருகைப்பதிவேட்டையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸார் விரைந்து வந்து கவுன்சிலர்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெளியே சென்றனர்.

 ஆனால், திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் நகராட்சி மன்ற கூட்டரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் கவுன்சிலர்கள் ஸ்டவ் உள்ளிட்டவற்றை கொண்டுவந்து சமைக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.  நகராட்சி ரகளை தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என கூறிய போலீஸார், நகராட்சி அலுவலகத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com