மதுரையில் வங்கி வசூல் ஏஜென்ட் மீது மிளகாய்ப் பொடி தூவி பணம் பறித்த மர்மநபர்கள் மீது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
மதுரை முடக்கத்தான் சாஸ்தாநகர் சம்பந்தர் வதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவர் வடக்காவணிமூலவீதி பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசூல் ஏஜென்ட்டாக பணிபுரிந்துவருகிறார்.
ஆனையூர் பகுதியில் சனிக்கிழமை வசூலை முடித்துவிட்டு ரூ.75,600 பணத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது குலமங்கலம் சாலை பாண்டியன் கூட்டுறவு வங்கி அருகே மற்றொரு மோ்டடார் சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியை திடீரென வழிமறித்து மிளகாய்ப் பொடி தூவியுள்ளனர். பின்னர் சுப்பிரமணியிடமிருந்த பணப்பையைப் பறித்துள்ளனர். ஆனால், அவர் பையைத் தராமல் போராடியுள்ளார்.
மர்மநபர்கள் சுப்பிரமணியனை கீழே தள்ளிவிட்டு பையிலிருந்த பணத்தில் ரூ.53,500 மட்டும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் செல்லூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். மதுரை நகரில் மாவு வியாபாரியிடம் ரூ.15 லட்சத்தை காரில் வந்த மர்மக்கும்பல் வெள்ளிக்கிழமை பறித்துச்சென்ற சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யாத நிலையில், மீண்டும் வழிப்பறி சம்பவம் நடந்திருப்பது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.