குன்னூர் அருகில் உள்ள பில்லிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கருடன் ரூ 68 லட்சம் மதிப்பிலான நகை பணம் சனிகிழமை இரவு கொள்ளைப் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் அருகில் உள்ளது பில்லிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தங்களது நகை மற்றும் சேமிப்புகளை இங்கு வைத்திருந்தனர். இப்பகுதியில் உள்ள பொது மக்கள் காலை இந்த கட்டடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இதன் செயலாளராக இருக்கும் ஹால்துரைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக அப்பகுதிக்கு வந்து லாக்கரை சோதித்த போது லாக்கரில் இருந்த 68 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளைப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கோத்தகிரி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இப்பகுதியில் ,பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மேலும் கூட்டுறவு சங்க கட்டடத்தை சுற்றிலும் பல்வேறு மது பாட்டில்கள் கிடந்ததால் இந்தக் கொள்ளை தனியாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூட்டாக பலர் சேர்ந்து கொள்ளையடித்திருக்க வாய்ப்பிருப்பாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்..
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது ஏற்கனவே இந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் மூன்று முறை கொள்ளை போயிருப்பதாகவும் மேலும் அவசர கால அலராம் ஒளி எழுப்பும் சைரன் ஒயர்கள் வெளியில் தெரிவதால் அதனை குற்றவாளிகள் அறுத்து தெரிந்து உள்ளே நுழைந்துள்ளதாகவும் மேலும் இந்த கடன் வசதி சங்கட்டடத்தில் அஜ்ஜூர் பன்னாட்டி பில்லிக்கம்பை, ஒன்னதலை, குடுமனை, மனவரை, உள்ளிட்டப்பகுதிகளைச் சேர்ந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவே காவல் அதிகாரிகள் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேணடும். மேலும் அரசு இந்த கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாக்கரோடு நகை திருடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.