சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் இருந்து கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்துக்கு சிலர் கடத்தி வருவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மேட்டூர் அருகேயுள்ள காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனை நடத்திய உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதில் சுமார் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், மேட்டூர் சுற்றுப் பகுதிகளில் வாங்கப்பட்ட அரிசியை மாதேஸ்வரன் மலைப் பகுதியில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக காவேரிபுரம் பழனியப்பன் (50), மாதேஸ்வரன் மலை வெள்ளையப்பா (35), மேட்டுப்பாளையூர் வீரப்பன் மனைவி வீரக்கா (42), கோவிந்தபாடி கணேசன் மனைவி பெரியதாயி (35) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்து வருவதால் அவர்களை கள்ளச் சந்தை தடுப்பு குண்டர் சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்துக்கு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பரிந்துரைத்திருந்தனர். இதையடுத்து 4 பேர்களையும் தடுப்புக் காவலில் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.அதன்படி, சேலம் சிறையில் உள்ள பழனியப்பன், வெள்ளையப்பா, வேலூர் பெண்கள் சிறையில் உள்ள வீரக்கா, பெரியதாயி ஆகியோரிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.