உலக அளவில் இந்தியா தனித்து இயங்க முடியாது என்று முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
அரசியல் சிந்தனையாளர் மன்றம் மற்றும் பாரத யாத்திரை மையத்தின் சார்பில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட திரைப்பட மற்றும் சின்னத்திரை இயக்குநர் டி.என்.சீதாராமுக்கு முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ணஹெக்டே விருது வழங்கி அவர் பேசியது: கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ணஹெக்டே, அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது நெருங்கிய நண்பராக விளங்கினார். நான் முதல்வராக இருந்தபோது, உடல்நலக்குறைவால் ராமகிருஷ்ணஹெக்டேமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சைக்கு செலவு செய்ய பணமில்லாமல் தனது தோட்டத்தை விற்பனை செய்ய ஹெக்டே திட்டமிட்டிருந்தார். அதற்கு இடமளிக்காமல், அவரது சிகிச்சை செலவை அரசே ஏற்றது. பணம் சம்பாதிப்பதாக அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால், ராமகிருஷ்ணஹெக்டே போன்றோருக்கு மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் தவித்தார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அதேபோல, காங்கிரஸ் கட்சியில் சேருமாறு என்னை அழைத்தவரே ஹெக்டே தான்.
இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்கட்சிகள் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. தாராளமயமாக்கல் சூழலில் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளும் கொள்கையை இந்தியா பின்பற்றமுடியாது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்றில்லாமல், ஏதாவதொரு நாட்டை சார்ந்துதான் இந்தியா இயங்க வேண்டியுள்ளது. சீனாவுடன் எல்லைப்பிரச்னை நிலவினாலும், நமது நாட்டின் 60 சத இறக்குமதி அந்நாட்டில் இருந்து செய்யப்படுகிறது.
நட்புநாடுகளை தேர்வு செய்வது போல, அண்டை நாட்டினரை நாம் தேர்வு செய்ய இயலாது. எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும், பாகிஸ்தானுடன் இணக்கமாக இருப்பதை தவிர்க்க முடியாது. எல்லா நாடுகளும் இணைந்து வாழ்வது தான் நேரு முன்வைத்த வெளிநாட்டுக்கொள்கை. அதற்கு மாற்று ஏதுமில்லை என்றார் அவர். விழாவில் கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர், தாகூர் பீட இயக்குநர் எச்.எஸ்.சிவபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.