குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டத்தின் படி காவல் நிலையங்களில் குற்றவாளிகளின் விவரங்கள், வழக்குகள் குறித்து உடனுக்கு உடன் கணிப்பொறியில் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் காவல் நிலையங்கள் அனைத்தும் வலைப்பின்னல் திட்டம் மூலம் ஆன்லைனில் இணைக்கப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சி பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது.
தமிழகத்தில் காவல் துறையை நவீனப்படுத்தப்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குற்றவாளிகள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் வலைப்பின்னல் என்ற புதிய திட்டத்தினால் காவல் நிலையங்கள் அனைத்தும் ஆன்லைனில் இணைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 1492 காவல் நிலையங்களும் ஆன்லைனில் இணைக்கப்படுகிறது. இதற்காக 479 மேல் நிலை அலுவலகங்கள் மற்றும் 938 சிறப்பு பிரிவுகள் என மொத்தம் 2,909 மையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கிறது. இதற்காக ரூ.113.24 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த முறையால் காவல் நிலையங்களில் ஆவணங்களை பாதுகாப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சந்தேகப்படும் நபர்கள் குறித்து உடனுக்கு உடன் தகவல்களை பெறுவதற்கு இத்திட்டம் பயன்படும். அதோடு, உயர் அதிகாரிகளுக்கும் தேவையான தகவல்களை உடனே பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கும்.
இந்த முறையில் ஆன்லைன் மூலம் மாவட்டம் தோறும் பதிவான வழக்குகள் குற்றவாளிகளின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த வளைதலத்தில் இணைக்கப்படும் போது எங்கிருந்தாலும், அங்கிருந்து கொண்டே எந்த வழக்கு தொடர்பான விவரங்களையும் எளிதில் பெறமுடியும். அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 54 காவல் நிலையங்களில், முதல் கட்டமாக 49 காவல் நிலையங்கள் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள காவல் நிலையங்களில் விரைவில் இணைக்கப்பட இருக்கிறது.
இதற்காக கடந்த 2011 வரையில் 10 ஆண்டுகளுக்கான வழக்குகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நிகழாண்டுக்கான வழக்குகள் பதிவேற்றம் செய்யப்படும் பணி நடந்து வருவதாகவும் எஸ்.பி. மகேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பக டி.எஸ்.பி.பாஸ்கரன், விருதுநகர் டி.எஸ்.பி.சுலைமான், தனிப்பிரிவு ஆய்வாளர் மகேந்திரபாண்டியன், காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.