நாமக்கல் தனியார் பள்ளி மாணவன், பள்ளி விடுதியில் தூக்கிட்டு இறந்ததை அடுத்து அம்மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே முக்கியச் சாலைகளை மறித்து 2 மணி நேரம் நடந்த இம்மறியலால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, பள்ளி இயக்குநர், விடுதி காப்பாளர், மற்றொரு மாணவன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாரிமுத்துவின் மகன் மோகன்ராஜ்(15). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனிóயார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த இந்த மாணவன், வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதி அறையில் தூக்கிட்டு உயிருக்கு போராடியதாகத் தெரிகிறது. சக மாணவர்கள் சத்தம்போட்டதை அடுத்து பள்ளி கணக்காளர் ராஜீ(28) கதவை உடைத்துச் சென்று மோகன்ராஜை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகே போலீஸாருக்கும், மோகன்ராஜின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் மற்றும் அதே விடுதி மாணவன் கார்த்திக் ஆகியோரிடையே பிரச்னை இருந்துள்ளது. இதையறிந்த பள்ளி இயக்குநர் தங்கவேல் வெள்ளிக்கிழமை இரவு மோகன்ராஜை அழைத்து திட்டினாராம். தவிர, விடுதி காப்பாளர் ரேணுசிங்கும் மோகன்ராஜை மட்டும் திட்டினாராம். இதனால், மனமுடைந்த மோகன்ராஜ், இரவு விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சம்பவத்தை அறிந்த அம்மாணவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சங்ககிரி வழக்குரைஞர்கள், பள்ளி இயக்குநர், விடுதி காப்பாளர், மாணவன் கார்த்திக் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அதுவரை மோகன்ராஜின் உடலை பெற மாட்டோம் என்றனர். எனினும், போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரம் நீடித்த மறியலை அடுத்து அங்கு வந்த சார்ஆட்சியர் அஜய்யாதவ், எஸ்பி பி.கண்ணம்மாள் ஆகியோர் உடனடியாக விடுதிக் காப்பாளரை கைது செய்வதாகவும், பெற்றோர்கள் அளிக்கும் புகாரின்படி மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்று உறவினர்கள் மறியலை கைவிட்டு புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் மீதும் விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மோகனூர் சாலை, பரமத்தி சாலை என முக்கிய சாலைகளை மறித்து பேருந்து நிலையம் அருகில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். மாலை 3.15 முதல் 5.15 மணி வரை நடந்த இந்த மறியலால் நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து, பள்ளி இயக்குநர் தங்கவேல், விடுதி காப்பாளர் ரேணுசிங், மாணவன் கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்வதாக எஸ்பி பி.கண்ணம்மாள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தால் நாமக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.