திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனுமீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பவானிசிங்கை நீக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆக.23-ஆம் தேதி ரிட்மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா முன்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்தவழக்குரைஞர் குமார், அரசு தரப்பு வழக்குரைஞர் பவானிசிங் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை ஆட்சேபித்த அன்பழகன் தரப்பு வழக்குரைஞரும் எம்.பி.யுமான தாமரைச்செல்வன், பவானிசிங் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என்று வாதாடினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி போப்பண்ணா, அதற்குள் என்ன மாயஜாலமா நடந்துவிடப்போகிறது என்று கூறினார். எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவே மனுவை தள்ளுபடிசெய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதாக தாமரைச்செல்வன் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.