

ராஜபாளையம் அருகே குடிதண்ணீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கிராம மக்களின் சார்பில் தமிழ்நாடு அருந்ததியர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் நகர், அருந்ததியர் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 4 மாதங்களாகவே குடிதண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிப்பதற்கான தண்ணீர் இல்லாத நிலையில் 2 கி.மீ தூரம் நடந்து பம்ப்செட் தோட்டத்திலும், அருகில் உள்ள தெங்குவெங்காநல்லூர் கிராமத்திற்கும் சென்று எடுத்து வரவேண்டியிருக்கிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் காலை நேரங்களில் தண்ணீர் எடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் பஞ்சாலை மற்றும் விவசாய கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையேற்படுகிறது.
மேலும், இது குறித்து ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலகத்திலும் புதிதாக ஆழ்குழாய் அமைத்து குடிதண்ணீர் வசதி செய்து தர மனு அளித்தோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். அதனால், எங்கள் கிராம மக்களின் சிரமத்தை உணர்ந்து ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் கொடுத்த மனுவில் தமிழ்நாடு அருந்ததியர் வாழ்வுரிமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.