பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சுயமரியாதை இருந்தால் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்தத்தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்டோரை சிறையில் உடனடியாக அடைக்காமல் தடுக்கும் அவசர சட்டத்தை குப்பைக்கூடையில் போட வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவமதித்துள்ளார். பிரதமர் பதவியின் கௌரவம், மரியாதையை பாதுகாப்பதற்காக தனது பதவியை மன்மோகன்சிங் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சுயமரியாதை இருக்கும்பட்சத்தில், தனது பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, மக்களவையில் தாக்கல் செய்து, நிலைக்குழுவின் பரிசீலனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை காக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து குடியரசுத்தலைவரிடம் பாஜக புகார் அளித்துள்ளது. அவசரசட்டத்திற்கு குடியரசுதலைவர் ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று தெரிந்ததும், ராகுல்காந்தி அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழல், முறைகேடுகளில் மூழ்கியுள்ள மத்திய அரசு, எல்லா துறைகளிலும் தோல்விகண்டுள்ளது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பு குறைந்துள்ளது. ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசுக்கு தெளிவான சிந்தனைப்போக்கு இல்லை. ராகுல்காந்தியின் விமர்சனத்தை கவனித்தால், எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை என்பது தெரியும்.
நரேந்திரமோடி கர்நாடகத்திற்கு வருகை தரவுள்ளார். வருகைக்கான தேதி குறித்து அக்.7-ஆம் தேதி நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.