சங்ககிரி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி நிலம் மோசடி: 3 பேர் கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சண்முகம், மணி இருவரும் சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தனர். அதில், சங்ககிரியைச் சேர்ந்த ஆல்பர்ட், இவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோருக்கு சங்ககிரி பேருந்து நிலையம் எதிரே சுமார் 72 சென்ட் நிலம் இருந்தது. அதில் சுமார் 29 சென்ட் நிலத்தை எங்களது தந்தை பழனிசாமி கடந்த 1971-ல் விலைக்கு வாங்கினார்.

 இந்த நிலையில் எங்களது தந்தை வாங்கிய நிலத்தையும் சேர்த்து வாழப்பாடி கார்த்திகேயன், மாதையன், காகாபாளையம் பகுதியைச் சேர்ந்த அழகப்பன் (50), சங்ககிரி வடிவேல்குமார் (44), குட்டி (45) உள்ளிட்ட 40-க்கும் அதிகமானோருக்கு ராஜேஸ்வரி விற்பனை செய்துள்ளார்.

 இந்த நிலத்தின் இப்போதைய அரசு மதிப்பு ரூ.2 கோடியாகும். எனவே எங்களது தந்தைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

 இது குறித்து விசாரணை நடத்திய நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் முனியப்பன் தலைமையிலான போலீஸார், பழனிசாமிக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பலருக்கு விற்பனை செய்ததாகவும், அதை வாங்கியதாகவும் ராஜேஸ்வரி உள்ளிட்ட 48 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

 இதையடுத்து அழகப்பன், வடிவேல்குமார், குட்டி ஆகிய மூவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 45 பேர்களைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அழகப்பன் மாநில முன்னாள் கபடி வீரர் என்று கூறப்படுகிறது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com