துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் மாற்றம் கூடாது: ராமதாஸ்

துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் மாற்றம் கூடாது என பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் மாற்றம் கூடாது: ராமதாஸ்

துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் மாற்றம் கூடாது என பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரது அறிக்கையில்...

தமிழக அரசுத் துறைகளில் மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கு 25 பேரைத் தேர்வு செய்வதற்கான முதல் தொகுதி முதனிலை (குரூப் 1 பிரிமிலினரி) போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் 16&ஆம் தேதி நடத்த உள்ளது.

முதல் தொகுதி முதனிலை மற்றும் முதன்மை தேர்வு முறையில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. அதன்படி, முதனிலைத் தேர்வுக்காண விடைத்தாட்களில் பொது அறிவு வினாக்கள் தவிர மாணவர்களின் பகுப்பாய்வு திறனை சோதிப்பதற்கான50 ‘பொது ஆப்டிடியுட்’ வினாக்களும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதன்மைத் தேர்வில், 300 வினாக்கள் கொண்ட  தாள் புதிதாக  சேர்க்கப்பட்டிருப்பதுடன், அதில் மாணவர்களின் ஆங்கிலப் புலமையை சோதிக்கும் வகையில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல், பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளித்தல் ஆகிய பிரிவுகளும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வியாளர்களிடமும், மனித வள வல்லுனர்களிடமும் கருத்து கேட்காமல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தன்னிச்சையாக எடுத்துள்ள இம்முடிவு போட்டித்தேர்வு எழுதும் முதல் தலைமுறை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக தமிழ் நீடிக்கும் நிலையில், அரசுப் பணிக்கு ஆங்கிலப் புலமை அவசியம் என்று நிபந்தனை விதிப்பது கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு இன்னொருபுறம் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது முரண்பாடான ஒன்றாகும்.  தமிழ்நாட்டில் தமிழ் மொழியே தெரியாத இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பலர் பணியாற்றும் நிலையில், முதல் தொகுதி பணிகளில் சேர விரும்புபவர்கள் ஆங்கில மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்வாணையம் கொண்டுவந்துள்ள இத்தகைய மாற்றங்களால் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்தால் மட்டும்தான் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற முடியும் நிலை ஏற்படும். நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்து எளிதாக வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்களால் லட்சக்கணக்கில் செலவழித்து தனிப்பயிற்சி நிலையங்களில் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு இத்தகைய அரசு வேலைகள் எட்டாக்கனியாகிவிடும்.

அதுமட்டுமின்றி, நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்களை 80-லிருந்து 120-ஆக உயர்த்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். புதிய முறைப்படி,நேர்முகத் தேர்வை நடத்துபவர்கள் நினைத்தால், எழுத்துத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தங்களுக்கு பிடித்தவர்களை முன்னுக்கு கொண்டு வந்து வேலை வழங்க முடியும். எனவே முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வில் புதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறையிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களை பாதிக்கும் இதுபோன்ற விபரீத சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு,  தேர்வாணையத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைவதில் அதன் நிர்வாகம்  கவனம் செலுத்த வேண்டும்.

- என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com