2014 தேர்தலில் தமிழர் குறித்த பாஜக நிலையை தெளிவாக்க எனது இலங்கை பயணம் உதவும்: ரவிசங்கர் பிரசாத்
By பரணீதரன் | Published On : 03rd June 2013 03:02 PM | Last Updated : 03rd June 2013 03:07 PM | அ+அ அ- |

முன்னாள் மத்திய அமைச்சரான பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், ஆறு நபர் குழுவுடன் நாளை (ஜூன் 4) ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். இந்தக் குழுவில், சிவசேனைத் தலைவர் சுரேஷ் பிரபு, மூத்த ஊடகவியலாளரான ஸ்வபன் தாஸ்குப்தா, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் கட்ஜு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ராம் மாதவ், மனித உரிமை ஆர்வலர் மோனிக் அரோரோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் உள்ள பண்டாரநாயக சர்வதேச கழகத்தின் அழைப்பின் பேரில் இந்தக் குழு செல்லவுள்ளதாகவும், ஸ்வாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு, தபால்தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரவிசங்கர் பிரசாத் இது குறித்துக் கூறியபோது, பாஜக சார்பிலான அதிகாரபூர்வ பயணமாக இது இல்லை; இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம் என்று கூறியுள்ளார்.
ஜூன் 7ம் தேதி அன்று, இந்தியக் குழுவுடன் இலங்கைக் குழு சந்திப்புக்கு பண்டாரநாயக இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 15 பேர் இலங்கைக் குழுவில் ரௌஃப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இருவர், மூத்த இலங்கை அமைச்சர்கள் மூவர், மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், எல்.எல்.ஆர்.சி உறுப்பினர் ஒருவர், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் 4 பேர், பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியக் குழுவுடன், இலங்கை தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பார்வையிட உள்ளனர்.
ஆனால், தமிழர் பகுதிகளுக்கு நிலம், காவல் அதிகாரம் ஆகியவற்றை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைச்சர்கள் விமல் வீர்வன்ஸா, படாலி சம்பிகா ரனவகா ஆகியோர் இந்தக் கூட்டதைப் புறக்கணித்துள்ளனர்.
சென்ற முறை இந்தியக் குழு இலங்கை பயணித்தபோது, அதிபர் ராஜபட்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து, தமிழர் பகுதிகளுக்கு நிலம், காவல் அதிகாரம் வழங்குவது குறித்த வடக்கு மாகாணம் தொடர்பிலான 13வது சட்டத்திருத்தம் குறித்து பேச்சு நடத்தியது.
இந்த முறை இலங்கைப் பயணத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தனது தனிப்பட்ட முயற்சியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆனால், தனது இந்தப் பயணமானது இலங்கைத் தமிழர் தொடர்பில் ஒரு புதிய அணுகுமுறையையும் கண்ணோட்டத்தையும் பாஜகவுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், அடுத்து வரும் 2014 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் தொடர்பிலான பாஜகவின் அரசியல் முன்னெடுப்புக்கு இது உதவும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.