காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில்,கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிடும்படி மத்திய அரசுக்கு பலமுறை முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
அதேபோல காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என பலமுறை பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாசரித்த உச்ச நீதிமன்றம், காவிரி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
வேறுவழியில்லாத நிலையில் மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து பிரதமருக்கு, 2 முறை தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் இதுவரை பதில் எழுதவில்லை.இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. தமிழர்களின் நலனை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.காவிரி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழர்களின் உரிமையை மீட்டு எடுத்து வெற்றி கண்டது போல, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பதிலும் முதல்வர் நிச்சயம் வெற்றி காண்பார் என்றார்.